பத்துத் தோழியர் உவமை
1 "அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப்
பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்:
மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர்
தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.
[1]
2 அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள்.
3 அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்;
ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.
4 முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன்
கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.
5 மணமகன் வரக் காலந் தாழ்த்தவே
அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.
6 நள்ளிரவில், 'இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள'
என்ற உரத்த குரல் ஒலித்தது.
7 மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.
8 அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து,
'எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன;
உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்' என்றார்கள்.
9 முன்மதி உடையவர்கள் மறுமொழியாக,
'உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம்.
எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது' என்றார்கள்.
10 அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள்.
அப்போது மணமகன் வந்து விட்டார்.
ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள்.
கதவும் அடைக்கப்பட்டது.
11 பிறகு மற்றத் தோழிகளும் வந்து,
'ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்' என்றார்கள்.
12 அவர் மறுமொழியாக,
'உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது' என்றார்.
[2]
13 எனவே விழிப்பாயிருங்கள்;
ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.
தாலந்து உவமை
(லூக் 19:11-27)
14 "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்:
நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து
அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார்.
15 அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும்
வேறொருவருக்கு இரண்டு தாலந்தும்,
இன்னொருவருக்கு ஒரு தாலந்தும்
[3] கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.
16 ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து
வேறு ஐந்து தாலந்து ஈட்டினார்.
17 அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார்.
18 ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித்
தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.
19 நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து
அவர்களிடம் கணக்குக் கேட்டார்.
[4]
20 ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி,
வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து,
'ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்;
இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்' என்றார்.
21 அதற்கு அவருடைய தலைவர் அவரிடம்,
'நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே,
சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர்.
எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன்.
உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார்.
22 இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி,
'ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர்.
இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்' என்றார்.
23 அவருடைய தலைவர் அவரிடம்,
'நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே,
சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர்.
எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன்.
உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்' என்றார்.
24 ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி,
'ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்;
நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன்.
25 உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்.
இதோ, பாரும், உம்முடையது' என்றார்.
26 அதற்கு அவருடைய தலைவர்,
'சோம்பேறியே! பொல்லாத பணியாளனே,
நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன்.
நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா?
27 அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்' என்று கூறினார்.
28 'எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப்
பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள்.
29 ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்.
அவர்கள் நிறைவாகப் பெறுவர்.
இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்.
[5]
30 பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள்.
அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்' என்று அவர் கூறினார்.
[6]
மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு
31 "வானதூதர் அனைவரும் புடைசூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது
தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்.
[7]
32 எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர்.
33 ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச்
செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல்
அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.
34 பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர்
தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து,
'என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்;
உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை
உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.
35 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்;
தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்;
அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்;
36 நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்;
நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்;
சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்பார்.
[8]
37 அதற்கு நேர்மையாளர்கள்
'ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம்,
அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்?
38 எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்?
அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்?
39 எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்?'
என்று கேட்பார்கள்.
40 அதற்கு அரசர்,
'மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு
நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என
உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்' எனப் பதிலளிப்பார்.
[9]
41 பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து,
'சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள்.
அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற
என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.
42 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை;
தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை.
43 நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை.
நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை' என்பார்.
44 அதற்கு அவர்கள்,
'ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ,
ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு
உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?' எனக் கேட்பார்கள்.
45 அப்பொழுது அவர், 'மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு
நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ
அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'
எனப் பதிலளிப்பார்.
46 இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும்
நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.
[10]- குறிப்புகள்
[1] 25:1 - லூக் 12:35,36.
[2] 25:11,12 - லூக் 13:25.
[3] 25:15 - மத் 18:24 அடிக்குறிப்பு காண்க.
[4] 25:19 - 2 கொரி 5:10.
[5] 25:29 - மத் 13:12; மாற் 4:25; லூக் 8:18.
[6] 25:30 - மத் 8:12; 22:13; லூக் 13:28.
[7] 25:31 - மத் 16:27; 19:26; 2 கொரி 5:10.
[8] 25:35,36 - எசா 58:7.
[9] 25:40 - நீமொ 19:17; திப 9:5; எபி 6:10.
[10] 25:46 - தானி 12:2; யோவா 5:29.